லோக்சபா சுமுகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: சபாநாயகர் ஓம்பிர்லா வேண்டுகோள்
புதுடில்லி: மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு லோக்சபா சுமுகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த சூழலில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சபாநாயகர் ஓம்பிர்லா உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார்.அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் பிரதிபலிக்க வேண்டும் என்றும், கேள்வி நேரம் முறையாக நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முக்கியமான மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்படுவதுடன், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மக்கள் சார்ந்த பிரச்சினைகள் விரிவாகவும் பயனுள்ளதாகவும் விவாதிக்கப்படும் வகையில், லோக்சபா நடவடிக்கைகளை அமைதியாகவும் ஒழுங்காகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.மக்களின் பிரச்சினைகளை நீண்ட காலம் நிலுவையில் வைக்காமல், அவையில் விவாதித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் ஓம்பிர்லா தெரிவித்தார். ஜனநாயகத்துக்காகவும், மக்களுக்காகவும் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், லோக்சபா தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.