யாசகம் பெற்று ரூ.8.4 லட்சம் சேமித்த மூதாட்டி; இறப்புக்குப் பிறகு வெளியான தகவல்
கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் 30-க்கும் அதிகமான மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியாவில் உள்ள ஒரு மசூதியின் முன்பு யாசகம் பெற்று வந்த அந்த மூதாட்டி, தனது சகோதரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அதன்பிறகு மூதாட்டி மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மூதாட்டி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் மொத்தம் ரூ.8.4 லட்சம் ரொக்கமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பணம் கண்டெடுக்கப்பட்ட காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டன.மூதாட்டிக்கு திருமணம் ஆகாத நிலையில், அவரது சேமிப்புத் தொகை சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரு சகோதரர் ரூ.6 லட்சத்தைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரருக்குக் கிடைத்த ரூ.2.4 லட்சத்தை அவர் அங்குள்ள மசூதிக்கு நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.