மும்பை: 7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டு 10 வயது சிறுமி உயிர் பிழைப்பு
மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைஷாவின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பிளாஸ்டிக் பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.மைஷா தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும், பேனா மூடி பிளாஸ்டிக்கால் ஆனது என்பதால் சாதாரண எக்ஸ்-ரே பரிசோதனையில் அது கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக, அவருக்கு காசநோய் மற்றும் ஆஸ்துமா இருப்பதாக கருதி கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்கான மருந்துகள் மற்றும் இன்ஹேலர்கள் வழங்கப்பட்டு வந்தன.சிறுமியின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி. குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி உள்ளிட்ட விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டபோது, இடது பக்க மூச்சுக்குழாயின் ஆழப்பகுதியில் பேனா மூடி சிக்கியிருப்பது தெரியவந்தது.நீண்ட காலமாக அந்த பொருள் நுரையீரலில் இருந்ததால், இடது நுரையீரலின் கீழ்பகுதி முழுமையாக சீழ் பிடித்து சுருங்கி, கடுமையாக சேதமடைந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பேனா மூடியுடன், முழுமையாக சேதமடைந்த நுரையீரலின் ஒரு பகுதியும் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு மைஷா ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கு நீடித்த இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.