மிலாடி நபி: இசுலாமிய மக்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள் - வைகோ
மிலாடி நபியை முன்னிட்டு, இசுலாமிய மக்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனிதகுலத்தின் விடுதலைக்காகவும், அறியாமையை அகற்றவும் தொடர்ந்து பாடுபட்டவர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) என குறிப்பிட்டுள்ளார்.அன்பை வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு அரணாக இருப்பது, போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடுதல், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளால் நபிகளாரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.மனிதர்களிடையே சகோதரத்துவத்தையும், உலகம் முழுவதும் சமாதானத்தையும் போதித்த நபிகளாரின் பிறந்தநாள், சந்திர கணக்கின்படி 1501-வது ஆண்டாகவும், சூரிய கணக்கின்படி 1456-வது ஆண்டாகவும் குறிப்பிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.நபிகளாரின் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மிலாடி நபியை கொண்டாடும் இசுலாமிய மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.