மின்கட்டணம் உயர்வா? - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
மின்கட்டணம் உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், வாட்ஸ்-அப்பில் பரவிய தவறான தகவலின் அடிப்படையில்தான் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதாக விமர்சித்தார். சிலர் சமூக ஊடகங்களில் மின்கட்டணம் அதிகமாக வந்ததாக பதிவிட்டு வருவதாகவும், அது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.கடந்தாண்டு இதே கோடை காலத்துடன் ஒப்பிடும்போது, அப்போது 11.50 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு அளவில் மின்கட்டணம் உயர்ந்திருந்ததாகவும், இந்தாண்டில் அந்த எண்ணிக்கை 9.60 லட்சமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி, கடந்தாண்டை விட சுமார் 2 லட்சம் பேர் குறைவாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டதுபோல் 3.70 லட்சம் புகார்கள் வரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மின்கட்டணம் உயர்ந்ததாக வதந்திகள் பரவி வருவதாகவும், கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர் பயன்பாடு அதிகரிப்பதால் மின் நுகர்வு உயரும்; அதன் காரணமாக மின்கட்டணமும் அதிகரிப்பது இயல்பானது என்றும் அவர் கூறினார்.மேகதாது விவகாரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை என்பதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் முதல்-அமைச்சர் விஜய் கேட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தேவையின்றி அதிமுக நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.நீர் திறக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் கர்நாடகா அதை செயல்படுத்த மறுப்பதாக அமைச்சர் கூறினார். மேகதாது விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும், முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்பது பற்றிய தகவலும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீர் திறக்க மறுப்பதையே கர்நாடகா கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் நிலைப்பாடாகக் கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.மேகதாது தொடர்பாக முதல்-அமைச்சர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழக மக்களுக்கு எதிராகவே மத்திய அரசு செயல்படுகிறதா என்பது தெரியவில்லை என்றும், இந்த பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் தரப்பில் இருந்து ஒரு வாரத்திற்குள் தேவையான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.