மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வேட்பு மனு தாக்கல் விவரங்கள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி மனு தாக்கல் நிறைவடையும். செப்டம்பர் 17-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் காலியானது எப்படி? மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், இந்த இரு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேலையும், தாராபுரம் தொகுதிக்கு சத்யபாமாவையும் தவெக சார்பில் வேட்பாளர்களாக களமிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 5 தொகுதிகளில் தேர்தல் தாமதம் கரூர் தொகுதி கடந்த ஜூன் 30-ம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறைகளின்படி, ஒரு சட்டமன்ற தொகுதி காலியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை தொடர்புடைய தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இந்த 5 தொகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.