மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த தனுஷ்... கோ-பூஜையிலும் பங்கேற்பு
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு நேரத்தில் தனது இரண்டு மகன்களுடன் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.சமீபத்தில் வெளியான 'கர'திரைப்படத்தைத் தொடர்ந்து, ஆக்ஷன் கதைக்களத்தை மையமாகக் கொண்ட 'ஓம்' படத்தில் தனுஷ் நடித்துவருகிறார். 'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் மம்முட்டி, ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில், தனது இரு மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற தனுஷ், சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கு நடைபெற்ற கோ-பூஜையிலும் பக்தியுடன் கலந்து கொண்டார்.தனுஷ் கோயிலுக்கு வந்திருப்பது தெரியவந்ததும் ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவரை நேரில் காணவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் கோயில் வளாகத்திலும், அருகிலுள்ள படப்பிடிப்பு பகுதிகளிலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.