புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது: அமித்ஷா வழங்கினார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தார். கவர்னர் மாளிகைக்கு சென்ற அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர். இதையடுத்து அமித்ஷா கவர்னர் மாளிகையில் தங்கினார்.பின்னர் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்று, புதுச்சேரி காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை வழங்கினார்.
‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ என்பது சிறப்பான நீண்டகால சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவப் படைகள் அல்லது மாநில காவல்துறை பிரிவுகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் உயரிய கவுரவமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டபோது, மக்களுக்கு சேவை செய்வதில் புதுச்சேரி காவல்துறை முதலிடத்தில் இருந்ததாக குறிப்பிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் காவலர்கள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் பணியாற்றியதாக அவர் பாராட்டினார்.அச்சமின்றி துணிச்சலுடன் காவலர்கள் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை என்றும் அமித்ஷா தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.குறிப்பாக புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட அமித்ஷா, ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, பகல் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.