பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தேனியில் ரூ.2.50 கோடி செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி இயக்குநர் பாரதிராஜா உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.பாரதிராஜாவின் கலைப் பங்களிப்புகளைப் போற்றும் வகையில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் ராஜ்மோகன், பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில் தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கமல்ஹாசன், பாரதிராஜா தனது படைப்புகள் மூலம் மண்ணின் மணத்தைத் திரையில் பதிவு செய்தவர் என்றும், அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படுவது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பாரதிராஜாவுக்கு அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இது காலம் தாழ்த்தாமல் செய்யப்பட்ட நன்றிக்கடன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.