பள்ளி கேண்டீனில் உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்த பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயதான பிரின்ஸ் சோனி என்ற பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த புதன்கிழமை காலை பள்ளி கேண்டீனில் அவர் உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சில நிமிடங்களிலேயே பள்ளி வளாகத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லாமல், பள்ளியிலேயே வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர், மகனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், மாணவரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.