பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
கர்நாடக மாநிலத்தின் குடகுமலை பகுதியில் தோன்றும் காவிரி ஆறு, தர்மபுரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை அடைகிறது. வழக்கமாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் காலங்களில், ஒகேனக்கல் காவிரி ஆறு வெள்ளப்பெருக்குடன் ஓடி, மெயின் அருவி, சினி அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும்.அந்த நேரங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து, அருவிகளிலும் காவிரி கரையோரப் பகுதிகளிலும் குளித்து மகிழ்வதுடன், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பது வழக்கம்.ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு கடுமையாக குறைந்துள்ளது. இதனுடன், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் நீர்வரத்து மேலும் சரிந்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீரால் நிரம்பியிருந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி, தற்போது பெரும்பாலும் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.
குறிப்பாக ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் வந்ததால், ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, ஆற்றில் ஆங்காங்கே மட்டும் தண்ணீர் தேங்கி குட்டைகள் போல காணப்படுகிறது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்திருப்பதும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்குத் தேவையான நீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், சுற்றுலாவை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள் மற்றும் உணவு தயாரித்து விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.