பணம் கொடுத்தால்தான் வேலை என்ற நிலைக்கு இனி இடமில்லை: அமைச்சர் ஆனந்த்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதன் பொதுமாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:உலகில் தூய்மை பணியாளர்களைப் போன்று அர்ப்பணிப்புடன் சேவை செய்வோர் வேறு யாரும் இல்லை. இதை வெறும் கைதட்டலுக்காக கூறவில்லை. கடந்த காலங்களில் தூய்மை பணியாளர்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்த ஏன் அக்கறை காட்டப்படவில்லை என்பது தெரியவில்லை. ஆனால், இனிமேல் முதல்-அமைச்சர் விஜய், அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பார்.தலைவரின் முகத்தை பார்த்தே மக்கள் வாக்களிக்க தயாராக இருந்ததால் இன்று வெற்றி பெற்றுள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எந்த தவறும் செய்யமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.ஏழை மக்களிடம் எப்போதும் அக்கறை கொண்ட கட்சியாகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியாகவும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
எளிய மக்களே அதிகம் உள்ள கட்சியாகவும் அது விளங்குகிறது. அதேபோல் தமிழக வெற்றிக்கழகமும் ஏழை, எளிய மக்களுக்காக செயல்படும் கட்சியாகும்.இனி கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட வேண்டிய சூழல் இருக்காது. அது கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலை. தற்போதைய முதல்-அமைச்சர் ஏழை மக்களுக்காக செயல்படுபவர். கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே போராட்டம் என்பார்கள். ஆனால், இனி அந்த நிலை இருக்காது.தூய்மை பணியாளர்கள் தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறியபோது மிகவும் வேதனையாக இருந்தது. உங்கள் முதல்-அமைச்சர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.லஞ்சம் வாங்காமல் இருந்தாலே வாழ்க்கையில் வளமாக இருக்க முடியும். இனிமேல் லஞ்சத்துக்கு இடமே இருக்காது.இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.