நேபாளத்தில் வெள்ள பாதிப்பு: டெல்லி செல்லும் தமிழக அமைச்சர்கள்
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து போதேகோசி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில், ஆற்றின் கரையோரம் இருந்த கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேபாளத்தில் ஏராளமான தமிழர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதுடன், அங்கு நடைபெறும் நிவாரணப் பணிகளையும் கண்காணிக்கும் வகையில் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்பவும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.