நேபாள பேரிடர்: பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு; இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் நிலை என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நீர்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகளில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இமயமலைப் பகுதியில் உருவாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.ஆற்றின் வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். உள்ளூர் மக்களுடன்,இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா சென்றவர்களும் வெள்ளத்தில் சிக்கிமாயமாகியுள்ளனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்தது, தொடர்ந்து மீட்கப்படும் உடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய பல சுரங்கத் தொழிலாளர்களையும் காணவில்லை. அவர்கள் பணிபுரிந்த சுரங்கங்களின் நுழைவாயில்கள் சேறு மற்றும் சகதியால் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்களை மீட்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.இதனால் இந்தியாவில் இருந்து சென்றுள்ள சுரங்க மீட்பு நிபுணர்களின் உதவியுடன், சுரங்கங்களில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதியை அகற்றி மீட்புப்பணிகளுக்கான பாதையை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.முன்னதாக அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் சிக்கியிருந்த 279 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.