நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
நெல்லை அருகே உள்ள தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லையை அடுத்த கல்லூர் அருகே வடுகம்பட்டியில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று மதியம் வெயில் கடுமையாக இருந்த நிலையில், ஆலையின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.தகவல் கிடைத்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் பேட்டை, நெல்லை, டவுன், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்தது. எனினும் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த தீ விபத்தில் சுமார் 25 ஆயிரம் டன் பழைய காகித பண்டல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவுக்காக தொழிலாளர்கள் சென்றிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு சீதபற்பநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை தாசில்தார் மாரிமுத்து குமார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆலையில் இருந்து எழுந்த கரும்புகை நெல்லை, சேரன்மாதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் தென்பட்டது.தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.