நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், விண்வெளித் துறையில் இந்தியா தொடர்ந்து முக்கிய சாதனைகளை பதிவு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், ராஜஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டிருப்பதையும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இத்தகைய முன்னேற்றங்களை உலகின் சில நாடுகள் மட்டுமே எட்டியுள்ள நிலையில், இந்தியாவும் அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றார்.உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகவும், மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சூழ்நிலையால் உருவான சவால்களை இந்தியா திறம்பட எதிர்கொண்டதாகவும், இதன் காரணமாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். பல்வேறு சவால்களைத் தாண்டியும் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவது அவசியம் என்றும், அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அனுபவம் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அனுபவத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும், விரைவான வளர்ச்சியின் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.