“நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், சட்டசபையில் கேள்வி நேரம் இதுவரை நடைபெறாத நிலையில், இன்று முதல் முறையாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதையடுத்து, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் கேள்வி எழுப்பினார்.அவர் பேசுகையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளப்பெருக்கில் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 750 பேரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருவதாக தெரிவித்தார். மேலும், சுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற 110 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் கூறினார்.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதா என்றும், மீட்புப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு அறிவித்த உதவி எண்களுக்கு இதுவரை எத்தனை அழைப்புகள் வந்துள்ளன, எத்தனை தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானமும் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்தும் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் உள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் கவலையில் இருப்பதாகவும் உதயநிதி கூறினார்.இதற்கு சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:“தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் இருந்து தப்பி, திமுரே முகாமில் தஞ்சமடைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை சாலை மார்க்கமாக காத்மாண்டுவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பான தகவல்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 34 தமிழர்கள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களை கண்டறிய நேபாள போலீசார் உள்ளிட்ட அனைத்து துறைகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பெருவெள்ளத்தில் 80 பாலங்களும், 40 கிலோமீட்டர் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் தமிழக அரசின் உதவி எண்களுக்கு வந்துள்ளன” என்றார்.மேலும், அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் திரும்பி வந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். அவரது தலைமையில் நேபாள வெள்ள நிலவரம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.