தொகுதி மறுவரையறை விவகாரம்: தவெக நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, மக்களவையில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையாத வகையில் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, கடந்த வாரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற தீர்மானத்தில் இருந்து விஜய் பின்வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறினார். தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை, பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிலங்கள் வழங்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மேலும், அடுத்த கூட்டத்தை தெலுங்கானாவில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களவையில் 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக இருப்பதாகவும் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை யாரும் திரித்து கூற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் அது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணை உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுக்கு 39 மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களே பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.