தேர்தல் வழக்கு: விஜய் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் – ஐகோர்ட்டு எச்சரிக்கை
பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இதே விவகாரம் தொடர்பாக வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணையில் உள்ளன. வழக்குகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், முதல்-அமைச்சர் விஜய்யும் பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாதது தெரியவந்தது.இதையடுத்து, அடுத்த விசாரணையின்போதும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் எச்சரிக்கை விடுத்தார்.மேலும், கடந்த விசாரணையின்போதே வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இனிமேல் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும், ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது விதிமுறை எனவும் நீதிபதி குறிப்பிட்டு, வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.