தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. துறைமுகம் அருகே ரூ.18,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தென் கொரியாவைச் சேர்ந்த எச்.டி. ஹூண்டாய் நிறுவனம், தமிழக அரசுடன் கடந்த 2025-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிறுவனத்தின் எச்.டி. கே.எஸ்.ஓ.இ. பிரிவு, கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து எச்.டி. ஹூண்டாயின் முதலீட்டை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வர ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், முதலீட்டை தமிழகத்திலேயே தக்கவைக்கும் வகையில் தமிழக அதிகாரிகள் நிறுவன நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
இதன் ஒரு பகுதியாக, எச்.டி. கே.எஸ்.ஓ.இ. நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான உயர்மட்ட குழுவினர், கடந்த 1-ம் தேதி முதல் ஒரு வாரம் தூத்துக்குடியில் தங்கியிருந்து, கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, **தூத்துக்குடியில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக எச்.டி. ஹூண்டாய் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.**