திருவொற்றியூர்: கழிவுநீர் தொட்டி குழியில் மணல் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மணல் சரிந்து விழுந்ததில், ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (37), சென்னையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கழிவுநீர் குழிகள் தோண்டும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், திருவொற்றியூர் அருகே புதிய கழிவுநீர் தொட்டி அமைக்க 15 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குழிக்குள் இறங்கி பூமிநாதன் பணியில் ஈடுபட்டிருந்தார்.திடீரென குழியின் மேற்பகுதியில் இருந்த மணல் சரிந்து பூமிநாதன் மீது விழுந்தது.
இதில் மணலுக்குள் சிக்கிய அவரால் வெளியே வர முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பூமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டனவா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.