தலைமைச் செயலகத்துக்கு பட்டு வேட்டி-சட்டையில் வந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்றதிலிருந்து தினமும் காலை நேரத்திலேயே தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு அலுவலர்களைப் போல மாலை வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் அவர், மதிய உணவையும் வீட்டிலிருந்து எடுத்துவந்து அங்கேயே சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த நிலையில், திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள ஜோசப் விஜய், தினந்தோறும் மாறுபட்ட உடை அலங்காரத்தில் வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது.குறிப்பாக, பெரும்பாலான நாட்களில் கோட்-சூட் அணிந்து வரும் அவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிவதை வழக்கமாகக் கடைப்பிடித்து வருகிறார்.
அதன்படி, இன்றும் பட்டு வேட்டி-சட்டை அணிந்தே தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அப்போது பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.