தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்: பிரதமர் மோடி கருத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பதில்
'நீட்' தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரத்தை முன்னிறுத்தி, நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, 'நீட்' முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.இதற்கிடையில், 'நீட்' விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் அரசுக்கு மிக முக்கியமானது என குறிப்பிட்டார்.மேலும், வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் நோக்கில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, சமூக வலைதள பதிவின் மூலம் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.