சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில், நாளை பயிற்சியை நிறைவு செய்ய உள்ள இளம் அதிகாரிகள் இன்று தங்களது வீரத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் இளம் ராணுவ அதிகாரிகள் உடல் தகுதி பயிற்சிகள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று மற்றும் பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன்களை செய்து காட்டினர்.உடல் வலிமை மற்றும் தகுதிக்கு அகாடமி வழங்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், சிறப்பு உடற்பயிற்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஆயுதங்களின்றி எதிரிகளை எதிர்கொள்ளும் தற்காப்புக் கலைப் பயிற்சிகள் நடைபெற்றன.அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற குதிரையேற்ற சாகச நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது.
Advertisement
குதிரைகளின் துல்லியமான அசைவுகளும், சவாரி செய்தவர்களின் திறமையான செயல்பாடுகளும் குதிரைகளுக்கும் வீரர்களுக்கும் இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தின.பின்னர், நடனம், இசை, தற்காப்புக் கலை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்த களரிப்பயிற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.நிகழ்ச்சியின் இறுதியில், பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க உள்ள இளம் அதிகாரிகள், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான பயிற்சியை பெற்றுள்ளனர் என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களையும் அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் பாராட்டினார்.