ரெயிலில் சென்னை பெண்ணிடம் திருடப்பட்ட 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை, ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் மீட்டனர். இந்த சம்பவத்தில் வயதான தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் இரும்புலியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சேதுவின் மனைவி மகாதேவி. இவர் மானாமதுரை செல்வதற்காக சென்னை-மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சாதாரண டிக்கெட்டில், என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். பயணத்தின்போது, சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் வைத்திருந்த தனது பை காணாமல் போனதை அவர் கவனித்தார். இதுகுறித்து கூடல்நகர் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் மகாதேவி தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை ஏட்டு சத்தியமூர்த்தி, ரெயில் மதுரை வந்ததும் சம்பந்தப்பட்ட பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினார். ஆனால், நகைகள் இருந்த பை அங்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வயதான தம்பதி ஒருவர் மகாதேவியின் பையுடன் சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுடலை, ஏட்டு முருகன் மற்றும் தமிழக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
அதற்குள் அந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றிருந்தது. பின்னர் விருதுநகர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான தம்பதி ஆட்டோவில் விருதுநகர் பஸ் நிலையம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து விருதுநகர் பஸ் நிலையம் சென்று அங்கு இருந்த வயதான தம்பதியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த காளியப்பன் (66), அவரது மனைவி சோலையம்மாள் (62) என்பது தெரியவந்தது. மேலும், மகாதேவி பயணம் செய்தபோது அவரது நகைப்பையை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தம்பதியிடம் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் அடங்கிய பையை போலீசார் மீட்டனர். புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் நகைகள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பன், சோலையம்மாள் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வயது முதிர்வை கருத்தில் கொண்டு இருவரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.