செங்கோட்டை கார் குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தா துணை அமைப்புடன் தொடர்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு உறுதி செய்ததையடுத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக 3 டாக்டர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது.இந்த சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு, இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தா தொடர்பாக தனது 38-வது அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.அதில், அல்-கொய்தா முன்பு சிறிய குழுக்களாக செயல்பட்டு பின்னர் பிராந்திய அளவிலான பயங்கரவாத அமைப்பாக வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பெரிய அளவிலான கட்டமைப்புகளுக்கு பதிலாக சிறிய, பரவலாக்கப்பட்ட குழுக்கள் மூலமாக அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், அல்-கொய்தாவின் துணை அமைப்பாக ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ செயல்படுவதாகவும், 2025-ம் ஆண்டு நவம்பரில் டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற தாக்குதலுடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்த தகவலும் அறிக்கையில் வெளியிடப்படவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அவற்றின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே தங்களது பெரும்பாலான கண்டறிதல்கள் அமைந்துள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.