சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85.73 லட்சம் முறைகேடு; விரிவான விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கான நெய் வினியோகத்தில் ரூ.85.73 லட்சம் மதிப்பிலான முறைகேடு நடந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, சபரிமலைக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் நெய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தரமற்ற நெய் விநியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கேரள அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மா மூலம் நெய் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த சீசனில் மில்மாவின் பத்தனம்திட்டா உற்பத்தி மையத்திலிருந்து 1,77,066 லிட்டர் நெய் சபரிமலைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், மீண்டும் தரம் குறைந்த கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பால்வள மேம்பாட்டு கழக இயக்குநர் சாலினி கோபிநாத் விசாரணை மேற்கொண்டார்.அந்த விசாரணையில், மில்மா தயாரித்த நெய்க்குப் பதிலாக, சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தரமற்ற கலப்பட நெய்யை மில்மா டின்களில் நிரப்பி விநியோகித்தது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த நெய்யை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தாததும் தெரியவந்துள்ளது.இந்த முறைகேட்டில் மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மொத்தமாக ரூ.85.73 லட்சம் அளவுக்கு மோசடி நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்காக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.