விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இன்று திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ரயில்வே கேட்டை கடந்து சென்றபோது, மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேருந்தில் திடீரென தீப்பிடித்தது.பேருந்தில் இருந்து புகையும் தீயும் வெளியேறுவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் இணைந்து பேருந்தில் இருந்த 60 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கினர்.பயணிகள் அவசரமாக வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பேருந்து முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது.ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் துரித நடவடிக்கையால் அனைத்து பயணிகளும் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சங்கரன்கோவில் போலீசாரும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.