கோவை: பாரதியார் பல்கலைக்கழக வனப்பகுதியில் தற்காலிக ஊழியர் சடலமாக மீட்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புற வனப்பகுதியில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதான சசிகுமார், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை அவர் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த பகுதியில் தேன் சேகரிக்கச் சென்றவர்கள் சடலத்தை கண்டதும் உடனடியாக வடவள்ளி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் சசிகுமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.முதற்கட்ட விசாரணையில் சசிகுமாரின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், இது கொலை சம்பவமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடவள்ளி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.