குரங்கை துன்புறுத்தி பிடித்த விவகாரம்: 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து, மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சம்பவத்தன்று 2 பேர் கல்லூரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குரங்கை துன்புறுத்தியபடி பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.வீடியோ காட்சிகளை பார்த்த பெரம்பலூர் வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, குரங்கை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஜீவா (20), திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த சின்னத்துரை (70) ஆகியோருக்கு வனத்துறையினர் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.