குட்கா கடத்தலுக்கு ஆதரவு: இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்
தஞ்சை அருகே குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் உரிய விசாரணை நடத்தாமல், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் அருகே இரும்புதலை பகுதியில் காரில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக கடந்த 10-ந் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்துக்கு (45) தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஏட்டு கவுதமன் (35), போலீஸ்காரர் அழகர்சாமி (37) ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சண்முகம், அங்கு போதைப்பொருட்களுடன் இருந்த அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (45), முருகன் (48) ஆகிய இருவரையும் பிடித்தார். அவர்களிடம் இருந்து சுமார் 73 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இருவரையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார், மறுநாள் காலையில் அவர்களிடம் முறையான விசாரணை நடத்தாமல் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்திடம் உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசாரே ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஆறுமுகம் மற்றும் முருகனிடம் முறையாக விசாரணை நடத்தாமல், அவர்களிடம் ஆதாயம் பெறும் நோக்கில் போலீசார் அவர்களை விடுவித்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து குட்கா கடத்தல் தொடர்பாக ஆறுமுகம், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் கடந்த 13-ந் தேதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.தொடர்ந்து நடைபெற்ற துறைரீதியான விசாரணையின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன், போலீஸ்காரர் அழகர்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரை செய்தார்.இந்த பரிந்துரையை ஏற்று, 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.