குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருநங்கையை திருமணம் செய்த ஐ.டி. ஊழியர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள மோரையைச் சேர்ந்த 30 வயதான பிரவீன்ராஜ், சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த 28 வயதான திருநங்கை கயல்விழியுடன், சமூக வலைதளமான முகநூல் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அவர், பின்னர் காதலித்து வந்தார்.இவர்களின் காதலுக்கு இரு தரப்பினரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பிரவீன்ராஜை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
பின்னர், கடந்த மே மாதத்தில் அங்கிருந்து அழைத்து வந்து, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபற்றி அறிந்த பிரவீன்ராஜ், கயல்விழியிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர்.அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில், இருவரும் நேற்று மாலை மாற்றிக்கொண்டு, தாலி கட்டி சுயமரியாதை பதிவு திருமணம் செய்து கொண்டனர்.