காவிரி நீர் பிரச்சினை: மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி டி.ஆர். பாலு நோட்டீஸ்
காவிரி நீர் விவகாரம் குறித்து மக்களவையில் அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தொடக்க நாள் முதலே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் மற்றும் தொடர் போராட்டங்களால் மக்களவையின் வழக்கமான செயல்பாடுகள் பலமுறை பாதிக்கப்பட்டன. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுமா அல்லது எதிர்க்கட்சிகள் மீண்டும் அவை நடவடிக்கைகளை முடக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சூழலில், காவிரி நீர் பிரச்சினையை விவாதிப்பதற்காக மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.ஆர்.
பாலு தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும், தமிழகத்துக்கு தேவையான அளவில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், டெல்டா பகுதி விவசாயிகள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.