காணிக்கை நகையை அணிந்த விவகாரம்: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி பணியிடை நீக்கம்
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர் கடந்த மே மாதம் சுமார் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள ஐம்பொன் நகையை காணிக்கையாக வழங்கியிருந்தார். அந்த நகையில் சொரிமுத்து அய்யனார், பூரண புஷ்பக்கல் அம்பிகை உருவம் இடம்பெற்ற பதக்கமும் இருந்தது.
கோவிலில் சுவாமிக்கு அந்த நகை அணிவிக்கப்பட்டிருந்தபோது லேசான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்வதற்காக கோவில் பூசாரி பிச்சையா, நகையை மற்றொரு பூசாரியான செந்திலிடம் ஒப்படைத்தார்.இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. அப்போது காணிக்கையாக வழங்கப்பட்ட அந்த நகையை பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்தபடி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த காட்சியை சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, தான் காணிக்கையாக வழங்கிய நகையை பூசாரி ஒருவர் அணிந்திருப்பதை பார்த்த தாமோதரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளம் வாயிலாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.இந்த தகவல் கோவில் நிர்வாக அலுவலர் இளங்குமரனின் கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், காணிக்கை நகையை பூசாரி செந்தில் அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினியின் உத்தரவின் பேரில் பூசாரி செந்திலை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், பக்தரிடம் இருந்து நகையை பெற்ற பிச்சையா, கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், நகை சேதமடைந்ததாக கூறி அதனை பழுதுபார்ப்பதற்காக செந்திலிடம் ஒப்படைத்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க பிச்சையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஐம்பொன் நகை தற்போது கோவில் நிர்வாகத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையரும் தக்காருமான சுப்புலட்சுமி, சரக ஆய்வாளர் கோமதி மற்றும் செயல் அலுவலர் இளங்குமரன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.