கஞ்சா விவகாரத்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் கொலை? - தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 16 வயதுடைய தனுஷ், ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று அவர் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் தனுஷும், அவரது நண்பரான ஜெயகேஷும் சென்றுகொண்டிருந்தபோது, சில பிளஸ்-1 மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் தனுஷின் முகத்தில் புகையை ஊதியதாகவும், அதை ஜெயகேஷ் கண்டித்ததாகவும் அவர் தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.நேற்று ஜெயகேஷ் பள்ளிக்கு வராத நிலையில், பள்ளி முடிந்த பிறகு பேருந்து நிலையத்துக்குச் சென்ற தனுஷை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழிமறித்ததாகவும், பின்னர் அவரை மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த மைதானப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தாக்குதலில் பலத்த உள்காயங்களுக்கு ஆளான தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரது தந்தை கூறினார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திருவொற்றியூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து 30 மாணவர்களும் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.