இந்திய சினிமாவிலேயே முதல்முறை?.. 12,000 திரைகளில் வெளியாகும் ‘டாக்ஸிக்’
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ பேரி டேல் பார் குரோன்-அப்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீட்டை படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற நடிகராக உயர்ந்த யாஷ், தற்போது ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா குழுக்களின் பின்னணியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.இரண்டுக்கும் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் கிடைத்துள்ளன.
சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்றன. அதேவேளையில், டீசர் மற்றும் டிரெய்லருக்கு கிடைத்த அதிகப்படியான பார்வைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், ‘டாக்ஸிக்’ படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நீளத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் ‘டாக்ஸிக்’ படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டமான திரை வெளியீடாக இப்படத்தை கொண்டு செல்ல படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.மேலும், ‘டாக்ஸிக்’ படத்துக்கான முன்பதிவு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யாஷ்ஷின் பான் இந்தியா சந்தைக்கு இந்தப் பிரம்மாண்ட வெளியீடு எந்த அளவுக்கு பலம் சேர்க்கும் என்பது படம் வெளியான பிறகு தெரியவரும்.