இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு கிடைத்த புதிய பெருமை - மோடி வாழ்த்து
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அந்நாட்டில் தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி இத்தாலி பிரதமராக பொறுப்பேற்றார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வரும் அவர், இன்றுடன் 1,414 நாட்கள் பிரதமராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இத்தாலியில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், இத்தாலியின் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற சிறப்பும் மெலோனிக்கு உள்ளது.இந்த சாதனையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஜார்ஜியா மெலோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், போருக்குப் பிந்தைய இத்தாலி வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பணியாற்றியதற்காக தனது நண்பர் மெலோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.மெலோனியின் தலைமையின் மீது இத்தாலி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், அவருக்கு வழங்கி வரும் உறுதியான ஆதரவும் இந்த சாதனை மூலம் வெளிப்படுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்தியா-இத்தாலி இடையிலான சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.