“இது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்” – நடிகை மமிதா பைஜு
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை மமிதா பைஜு, தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.தென்னிந்திய திரையுலகில் இளம் நடிகையாக கவனம் பெற்றுள்ள மமிதா பைஜு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படக்குழுவினர் பல்வேறு இடங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து கேரளாவின் திருவனந்தபுரத்திலும் புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு, தனது சிறு வயது நினைவை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:“நான் 8-ம் வகுப்பு படித்தபோது, என் அண்ணன் 11-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை சூர்யா சார் ஒரு தனியார் மாலுக்கு வந்திருந்தார். அப்போது என் அண்ணனும் அவரது நண்பர்களும் அவரைப் பார்க்க சென்றனர். ஆனால் என்னால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. நாங்கள் வசித்த இடத்திலிருந்து அந்த மாலுக்கு செல்வது எளிதாக இருக்கவில்லை என்பதால், அம்மாவும் அப்பாவும் என்னை அனுப்பவில்லை.
அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன். பின்னர் என் அண்ணன் சூர்யா சாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.ஆனால் இன்று அதே திருவனந்தபுரத்தில் உள்ள மாலில், சூர்யா சாருடன் இணைந்து அவருடைய படத்தில் நடித்துவிட்டு நிற்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.