ஆந்திர பிரதேசத்தில் ரூ.5,640 கோடி மதிப்பிலான சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம், போகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.இந்த தொடக்க விழாவில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் பல்வேறு அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதே நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் மைசூருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள விவேக ஸ்மராக் கலாசார மையத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்திய இந்த சர்வதேச விமான நிலையம் ரூ.5,640 கோடி செலவில் பசுமைவெளி தரநிலையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் பயணிகளை கையாளும் திறன் இந்த விமான நிலையத்திற்கு உள்ளது.இந்த புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.