ஆடி கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரளாக நேர்த்திக்கடன் செலுத்தினர்
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரம்மோற்சவ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலை 3 மணியளவில் அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதியம் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்த ஆண்டில், நத்தத்துப்பட்டி கிராம மக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து, சீர்பாதம் தாங்கி பவனியாக அழைத்துச் செல்கின்றனர்.இருக்கன்குடியின் முக்கிய சாலைகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன், அர்ஜுனா நதியைக் கடந்து கோவிலைச் சுற்றி வலம் வந்து, பின்னர் கொலுமண்டபத்தை அடைவார்.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை சுமத்தல், மாவிளக்கு ஏற்றுதல், தொட்டில் குழந்தை நேர்த்தி, அங்கப் பிரதட்சணம், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் மற்றும் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்புத் துறையின் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிடம், குளியலறை, தங்குமிடம், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.