அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு: சட்டசபையில் சலசலப்பு
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டனம் தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.சட்டசபை கூட்டம் தொடங்கியதும், இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக சார்பில் இபிஎஸ், பாமக சார்பில் சௌமியா மற்றும் பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து பேசினார். கர்நாடக வனப்பகுதிகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், கர்நாடக வனத்துறை அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நேர்மையான மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையாக முதல்-அமைச்சர் விஜய் இருப்பதாகவும், தமிழர்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் அவர்தான் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.பேசிய அவர், சிலருக்கு திடீரென தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் அக்கறை ஏற்படுவதாகக் கூறி, 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் நிர்மல்குமார் பேசிய தேவையற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.மேலும், இனிமேல் தேவையற்ற கருத்துகளை பேச அனுமதிக்கமாட்டேன் என்றும், கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டியே உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். "யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்?" என அமைச்சர் நிர்மல்குமாரை அவர் கண்டித்தார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.