அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: சென்னை அருகே இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறாத நிலையில், 31-வது மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.இந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.அதோடு, தென்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது, கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.மேலும், நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாநில எல்லை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே தற்போது கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
அவர் இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைய உள்ளார்.விமான நிலையத்தில் அவரை உயரதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர். அதன்பிறகு, அவர் சாலை மார்க்கமாக கோவளத்துக்கு செல்கிறார்.