அப்பாவின் குரல் கேட்டதும் கருவிலேயே புன்னகைத்த குழந்தை... இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி தருணம்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கருவில் இருந்த குழந்தை, தனது தந்தையின் குரலைக் கேட்டவுடன் புன்னகைப்பது போன்ற காட்சி அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.ஒன்டாரியோவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் லியா ஒலிவேரா, கடந்த ஜூலை 25-ஆம் தேதி வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அவருடன் வந்திருந்த அவரது கணவர், லியாவின் வயிற்றில் மெதுவாக முத்தமிட்டு, “காலை வணக்கம்... இனிய சனிக்கிழமை” என்று கருவில் இருந்த குழந்தையிடம் அன்புடன் பேசினார்.அவர் பேசிய சில நொடிகளிலேயே, ஸ்கேன் திரையில் தெரிந்த பெண் குழந்தையின் முகத்தில் புன்னகை மலர்ந்தது போன்ற தோற்றம் பதிவானது. இந்த எதிர்பாராத தருணத்தை லியாவின் சகோதரி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.இந்த காட்சியை பார்த்த மருத்துவக் குழுவினரும், குடும்பத்தினரும் உணர்ச்சிவசப்பட்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்ததாக கூறப்படுகிறது.இந்த அனுபவம் குறித்து யாகூ செய்திகளுக்கு பேட்டியளித்த லியா ஒலிவேரா, “அந்த தருணத்தை பார்த்தவுடன் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
மகிழ்ச்சியால் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. எங்கள் குடும்பம் வாழ்நாள் முழுவதும் நினைவுகூரும் அரிய தருணமாக இது மாறிவிட்டது,” என்று தெரிவித்தார்.மருத்துவ நிபுணர்களின் விளக்கத்தின்படி, கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் இருக்கும் குழந்தைகள் வெளியில் இருந்து அடிக்கடி கேட்கும் குரல்களை, குறிப்பாக தாய் மற்றும் தந்தையின் குரலை அடையாளம் காணும் திறனை இயற்கையாகவே வளர்த்துக் கொள்கின்றன.கருவிலேயே குழந்தை தந்தையின் குரலுக்கு அளித்த இந்த இனிய எதிர்வினை இடம்பெற்ற வீடியோ, தற்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை நெகிழச் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.