அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக இன்று சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள கடற்படை தளத்தை சென்றடைந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற துணை ஜனாதிபதி, கவர்னர் டி.கே. ஷோசை சந்தித்துப் பேசினார்.இதையடுத்து இன்று மாலை செல்லுலார் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவுச்சின்னத்தில் துணை ஜனாதிபதி மரியாதை செலுத்த உள்ளார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் அவர் பார்வையிடுகிறார்.தொடர்ந்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு மற்றும் அதில் பங்கேற்ற வீரர்களின் தியாகங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியிலும் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.பயணத்தின் இரண்டாவது நாளான நாளை ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள பிளாக் பாயிண்ட்டில் தேசியக் கொடியை துணை ஜனாதிபதி ஏற்றுகிறார்.
அப்போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார்.இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த பின்னர், நாளை மாலை சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லி திரும்புகிறார்.