665 காவல் துறை அதிகாரிகளுக்கு காவலர் பதக்கம்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்க வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.தமிழக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான முதல்-அமைச்சர் பதக்கத்திற்கு தேர்வான 665 காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன், ஜனாதிபதி பதக்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்திற்கு தேர்வானவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.இந்த விழாவில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியோர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படை, தடய அறிவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.விழாவிற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டு பார்வையிட்டதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர், காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் காவல்துறையின் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.