3,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் ஜிப்லைனில் சிக்கிய சுற்றுலாப் பயணி; துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்பு
மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான தோரன்மால் மலைப்பகுதியில், 3,500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கின் மீது அமைக்கப்பட்ட ஜிப்லைனில் சிக்கிய சுற்றுலாப் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
தோரன்மாலில் உள்ள 'சீதாகாய் பாயின்ட்' பகுதியில் சாகச விளையாட்டுகளை விரும்புவோருக்காக சமீபத்தில் ஜிப்லைன் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த ஜிப்லைனில் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், பள்ளத்தாக்கின் நடுப்பகுதியை அடைந்தபோது எதிர்பாராத வகையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அங்கேயே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இதனால், ஆழமான பள்ளத்தாக்கின் மேல் அந்தரத்தில் சிக்கிய அவர் தொடர்ந்து நகர முடியாமல் தவித்தார். இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் தோரன்மால் மலைப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், ஜிப்லைன் மையத்தின் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் அதே கயிறு வழியாக பயணியை நோக்கி சென்று, கடும் காற்றையும் பொருட்படுத்தாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, அவரை பாதுகாப்பாக மீட்டு தரைக்கு அழைத்து வந்தார்.இந்த சம்பவத்தில் சுற்றுலாப் பயணிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. மீட்புப் பணியின் பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, சாகச விளையாட்டு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.