200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்த நிலையில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது ஏன்? – சீமான் கேள்வி
தமிழ்நாட்டில் இந்த மாதத்திற்கான மின்கட்டணம் பல வீடுகளில் வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தபோதும், நடைமுறையில் பல வீடுகளுக்கு மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின் அளவீடு தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாலும், பழுதான மீட்டர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் போகும் வகையில் திட்டமிட்டு அளவீடு தாமதப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் கூறியுள்ளார்.தாமதமான மின் கணக்கீட்டின் காரணமாக மின் பயன்பாடு 500 யூனிட்டை கடந்ததாக கணக்கிடப்பட்டதால், இலவச மின்சார சலுகையை பெற முடியாததுடன், ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் அதிகரித்ததாக சீமான் தெரிவித்துள்ளார். தற்போதைய அதிகப்படியான மின்கட்டணத்திற்கு கணக்கீட்டு நடைமுறையிலும், தொழில்நுட்ப குறைபாடுகளிலும் உள்ள சிக்கல்களே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறிய அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 200 யூனிட் என்றும், 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.