ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி, GT3 Pro-AM பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. சினிமாவில் நடிப்பதுடன் கார் பந்தயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு சர்வதேச கார் பந்தயங்களில் மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேஸிங்’ மூலம் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஜித்குமாரின் அணி, அண்மையில் லண்டனில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்த பந்தயத்திலும் கலந்துகொண்டது. இதைத்தொடர்ந்து, ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் பங்கேற்றது.
Advertisement
இந்தப் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணியின் கார், GT3 Pro-AM பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தையும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தையும் அணி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்த மகிழ்ச்சியில் அஜித்குமார் தேசியக் கொடியை கையில் ஏந்தி வெற்றியைக் கொண்டாடினார். தொடர்ந்து, மேடையில் தனது அணியினருடன் கோப்பையைப் பெற்றுக்கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினார். கோப்பையுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைக் காணும் ரசிகர்கள் அவருக்கும், அவரது அணியினருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.