விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடைத்த தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் மூலம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் மட்டும் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பயணிகள் சென்னைக்கு திரும்பத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளித்து சிரமமின்றி அவர்கள் சென்னை திரும்பும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
Advertisement
அதன்படி, 14-ந்தேதி 2,240 சிறப்பு பஸ்களும், 15-ந்தேதி 1,325 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இரு நாட்களிலும் மொத்தம் 3,565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.