வன்முறை வெடிப்பு; துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: கிழக்கு நேபாளத்தில் காலவரையற்ற ஊரடங்கு
கிழக்கு நேபாளத்தில் நடைபெற்ற புனித யாத்திரையின்போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.சன்சாரி மாவட்டத்தின் திவான்கஞ்ச் பகுதியில் உள்ள கப்தன்கஞ்ச் பஜாரிலிருந்து சப்தகோஷி ஆற்றை நோக்கி நேற்று இரவு பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர். அந்த ஊர்வலத்தின் போது ஒரு தரப்பினர் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.இந்த மோதலைத் தொடர்ந்து வன்முறை பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் வீடுகள், மருத்துவமனைகள், வாகனங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதுடன், சில இடங்களில் சூறையாடலிலும் ஈடுபட்டனர்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பஜார் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதுடன், எச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இருப்பினும் வன்முறை தொடர்ந்ததால் போலீசார் நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் 24 வயதான ஓம் பிரகாஷ் மேத்தா உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரு தரப்பினரையும் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் கிழக்கு நேபாளத்தின் சம்பந்தப்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.